பிளாஷ்பேக்: கதை திருட்டு வழக்கில் சிக்கிய தேசிய விருது படம்
சிவாஜி நடித்த படங்களில் முக்கியமான படம் 'தெய்வப்பிறவி'. சிறிய இடைவெளிக்கு பிறகு பத்மினியுடன் அவர் நடித்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. 1960ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருந்தனர் கிருஷ்ணன் - பஞ்சு. இப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஏ.தங்கவேலு மற்றும் எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
'அனுமானம்' என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 8-வது தேசியத் திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படங்களுக்கான பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்காக இப்படம் 'அகில இந்தியத் தகுதிச் சான்றிதழை' வென்றது. அதே ஆண்டில் இப்படம் 'பிந்தியா' என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
குடும்பத்திற்குள் சந்தேகம் என்ற தீயை பரப்பி தனக்கு சாதகமானவற்றை செய்து கொள்ளும் ஒருவன். அவரை திருத்தும் நாயகன் என்பதுதான் கதை. இந்த கதை என்னுடையது என்று அப்போது அதிகம் பிரபலமாகாத ஒரு எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் காரணமாக படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்ப பெறும் சூழ்நிலையும் வந்தது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த படத்தின் கதை கிருஷ்ணன்-பஞ்சுவால் எழுதப்பட்டதே என தீர்ப்பளித்தது.
இந்த படத்தில் காமெடி நடிகை அங்கமுத்துவின் மகனாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் பின்னாளில் பிரபல இயக்குனரான எஸ்.பி.முத்துராமன்.