நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி
மலையாளத்தில் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017ம் வருடம் சிலரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் நடிகர் திலீப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார். பல வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டு நடிகர் திலீப் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது..
அதேசமயம் நடிகை துன்புறுத்தல் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு நீதிமன்ற காவலில் இருந்தபோது அது அங்கிருந்த நீதிமன்ற அதிகாரிகள் சிலரால் முறையற்ற வகையில் திறந்து பார்க்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் தொடுத்தார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் இந்த குற்றத்தை செய்தது தெரியவந்ததும் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு அந்த விஷயம் அமுங்கிப்போனது.
ஆனாலும் இந்த விசாரணை அறிக்கை தனக்கு திருப்திகரமாக இல்லை என்றும் இந்த விசாரணையில் தனக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படாமலேயே நடத்தப்பட்டது என்றும் குற்றம் சாட்டிய நடிகை, அப்படி அந்த மெமரி கார்டை முறையற்றதாக திறந்து பார்த்தவர்கள் அதை நகல் எடுத்தார்களா அல்லது மற்றவர்களுக்கு அனுப்பினார்களா என கண்டறிய சைபர் தடய அறிவியல் நிபுணர்கள் அடங்கிய ஒரு புதிய சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க இருந்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கிலிருந்து தான் விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளார். இதற்கான காரணங்களை அவர் குறிப்பிடவில்லை. இதையடுத்து இந்த மனு மற்றொரு நீதிபதியின் பார்வைக்கு மாற்றப்பட்டுள்ளது..