ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம்
தமிழைப் போல மலையாள திரையுலகிலும் நட்சத்திர வாரிசுகள் சினிமாவில் களமிறங்கி சாதித்து வருகின்றனர். துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்ற வாரிசு நடிகர்கள் தங்களது திறமையின் மூலம் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்துக் கொண்டு தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக பிஸியான நடிகர்களாக நடித்து வருகின்றனர். அதே சமயம் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், உதவி இயக்குனராக தொழிலை கற்றுக் கொண்டாலும் பின்னர் நடிகராக மாறி கிட்டத்தட்ட நான்கு படங்கள் வரை நடித்துள்ளார்.
இதில் மூன்று படங்கள் ஹிட்டானவை தான் என்றாலும் அவர் ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த சமயத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா கிளம்பி சென்று விடுகிறார். அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில் மகனின் இந்த போக்கு குறித்து சமீபத்தில் நடிகர் மோகன்லால் மனம் திறந்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைக்க நான் ஒருவன் இருப்பதே போதும் என்று பிரணவ் நினைத்து விட்டார் போல இருக்கிறது” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டவர், “பிரணவின் வயது இருக்கும்போது நானும் சினிமாவிலிருந்து விலகி இப்படி பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என நினைத்தேன். என்னால் அது முடியாமல் போனது. இப்போது என்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக பிரணவ் தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே பூரண சம்மதம் தான். நமது பிள்ளைகளின் வாழ்க்கையை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்.. அவன் விரும்பியபடி அவன் வாழ்க்கையை வாழட்டும்” என்று கூறியுள்ளார்.