பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன்
'பேட் கேர்ள்' படத்தில் நடித்து பரபரப்பு கிளப்பியவர் அஞ்சலி சிவராமன். தற்போது அவர் இந்திய நவீன ஓவிய உலகின் முன்னணி பெண் ஓவியரான அமிர்தா ஷெர் கில் வாழ்க்கை படத்தில் அமிர்தாவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அஞ்சலி சிவராமன்.
அமிர்தா ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் பிறந்து வளர்ந்தவர் தந்தை இந்தியர், தாய் ஹங்கேரியன். ஓவிய கலையில் நாட்டம் கொண்ட அமிர்தா 1934ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து இங்குள்ள எல்லோரா, அஜந்தா ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு அந்த ஓவியங்களை நவீன ஓவியமாக வரைந்தார். அதோடு அன்றைக்கு வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்வையும் வரைந்தார். அவரின் ஓவியங்கள்தான் 1930களில் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்வியலை சொல்லும் வரலாறாக உள்ளது. ஆனால் அவர் தனது 28வது வயதில் காலமானார். அவரது மரணம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
இவரது வாழ்க்கை கதை இப்போது ஹிந்தியில் ‛அம்ரி' என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதை 'சலாம் பாம்பே', 'மான்சூன் வெட்டிங்' போன்ற படங்களை இயக்கிய மீரா நாயர் இயக்குகிறார். நூற்றுக்கும் மேற்பட்டோரை ஆடிஷன் செய்ததில் அம்ரிதாவின் தோற்றம் அஞ்சலிக்கு பொருந்தியதால் அவரை தேர்வு செய்துள்ளனர். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, ஜெய்தீப், ஜிம் சரப் உள்பட பலர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹங்கேரி, பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது.