பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர்
ஏவிஎம் நிறுவனத்தில் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர் ஆர்.சுதர்சனம். இவரைத் தெரிந்த அளவிற்கு இவரது அண்ணன் ஆர்.கோவர்த்தனைப் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இசை குடும்பத்தை சேர்ந்த இவர் 'ஜாதகம்' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி படங்களுக்கும் இசை அமைத்தார். பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாசை அறிமுகப்படுத்தியதும் இவர்தான்.
1960ம் ஆண்டு “கைராசி” என்ற படத்திற்கு இசை அமைத்தார். இந்தப் படம் வெளிவந்தபோது, எம்.ஜி.ஆரின் 'மன்னாதி மன்னன்' படமும் சிவாஜி நடித்த 'பெற்ற மனம்' படமும் வெளிவந்தன. ஆனால் அவற்றை முறியடித்து, 'கைராசி' வெற்றியடைந்தது. அதற்கு முக்கியமான ஒரு காரணம் கோவர்த்தனத்தின் இசை. 'காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்' , 'காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே' , 'கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ' , 'அன்புள்ள அத்தான் வணக்கம்' போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன.
1967-ல் வெளிவந்த 'பட்டணத்தில் பூதம்' படத்தில் 'உலகத்தில் சிறந்தது எது”, 'கண்ணில் கண்டதெல்லாம் காட்சியாக', 'சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன. இதற்கடுத்து இவர் இசையமைத்த 'பூவும் பொட்டும்' படத்தில் 'நாதஸ்வர ஓசையிலே', 'உன்னழகைக் கண்டுகொண்டால்' போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன.
இப்படி பல படங்களுக்கு இசை அமைத்த கோவர்த்தன் சரியான வாய்ப்புகள் இல்லாமல் விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களிடம் இசை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். கடைசி காலத்தில் வறுமையில் வாடிய கோவர்த்தனத்திற்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பல இனிய பாடல்களை கொடுத்த கோவர்த்தன் தன் கடைசி காலத்தில் கேட்கும் திறனை இழந்ததுதான் காலத்தின் கொடுமை. அவர் இசை அமைத்த பாடல்களைகூட அவரால் கேட்க முடியாமல் போனது.