தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் மரணம்
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர் ஆர்பி சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 90க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார். தமிழில் இவர் தயாரித்த முதல் படம் ‛புது வசந்தம்'. தற்போது விஷால் நடிப்பில் 99வது படமாக மகுடம் படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இவர்களது தயாரிப்பில் 100வது படம் உருவாக உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஒரு திருமணத்திற்காக சென்றுள்ளார் சவுத்ரி. இவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
‛‛புது வசந்தம், புரியாத புதிர், சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, கோகுலம், கேப்டன், நாட்டாமை, பூவே உனக்காக, சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, ஆனந்தம், சமுத்திரம், ஷாஜகான், வருஷமெல்லாம் வசந்தம், திருப்பாச்சி, ஜில்லா'' உள்ளிட்ட பல தமிழ் படங்கள் இவரது தயாரிப்பில் உருவானவையாகும். பெரும்பாலும் இவரது தயாரிப்பில் விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்களின் படங்கள் மற்றும் சரத்குமார், விஜய் ஆகியோரின் படங்கள் அதிகளவில் உருவாகி சூப்பர் ஹிட்டானவை என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தவர் சவுத்ரி. அதேப்போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படங்கள் தயாரிப்பு மட்டுமின்றி நிறைய படங்களை விநியோகமும் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் கொசுபத்தி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார் சவுத்ரி. பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் பட தயாரிப்பில் ஈடுபட்டார். தயாரிப்பு, விநியோகம் தவிர்த்து மற்ற படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வந்தார். சவுத்ரியின் மகன்களான ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோரும் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளனர்.
சவுத்ரியின் உடல் நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது. இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெறுகிறது.