
நரசிம்மர் என்றதும் சிங்கமுகம் தானே நினைவுக்கு வரும். ஆனால் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் மனித முகம் கொண்ட நரசிம்மர் இருக்கிறார். சாந்தமான நிலையில் உள்ள இவருக்கு பிரதோஷத்தன்று துளசி மாலை சாத்தினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
முன்பொரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாளுக்கு கோயில் கட்டும் எண்ணம் எழுந்தது. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய சிவனும், பெருமாளும் குறிப்பிட்ட இடத்தைக் காட்டி கோயில் கட்ட உத்தரவிட்டனர். அதன்படி இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டார். அதன் அருகிலேயே பெருமாளுக்கு சிலை ஒன்றை வடித்து பிரதிஷ்டை செய்தார். அவருக்கு 'நரசிங்கப் பெருமாள்' எனப் பெயர் சூட்டினார்.
காலப்போக்கில் பெருமாள் பிரசித்தி பெறவே, 'நரசிம்மர் கோயில்' என பெயர் பெற்றது. சூரிய தோஷத்தை போக்குபவர் என்பதால் 'கதிர் நரசிம்மர்' எனப்படுகிறார். சூரிய திசை நடப்பவர்கள் இவரை தரிசித்தால் நன்மை பெருகும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும்.
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தியபடி நரசிம்மர் உள்ளார். எதிரில் கருடாழ்வார் சன்னதி உள்ளது. முதல் பூஜை பெருமாளுக்கும், அதன் பின் சிவனுக்கும் நடக்கிறது.
பிரகாரத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று அபிஷேகம் செய்தால் கடன் பிரச்னை, எதிரி தொல்லை தீரும். திருமணம் தடைபடுபவர்கள் வீரஆஞ்சநேயருக்கு எலுமிச்சை, துளசி மாலை சாத்துகின்றனர். கமலவல்லி தாயார் தனி சன்னதியில் அருள்கிறார்.
இங்குள்ள சக்கரத்தாழ்வார் அக்னி ஜுவாலை கிரீடத்துடன், பதினாறு கைகளிலும் ஆயுதங்கள் தாங்கியுள்ளார். இவருக்கு மேற்புறத்தில் உக்ர நரசிம்மர், கீழ்புறத்தில் லட்சுமி நரசிம்மர் உள்ளனர்.
எப்படி செல்வது: திண்டுக்கல் - பழநி சாலையில் 15 கி.மீ.,
விசேஷ நாள்: நரசிம்ம ஜெயந்தி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 7:30 - மாலை 6:30 மணி
தொடர்புக்கு: 0451 - 255 4324
அருகிலுள்ள கோயில்: வேடசந்துார் நரசிம்மர் 17 கி.மீ., (வெற்றிக்கு...)
நேரம்: காலை 7:30 -- 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 99526 46389