தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஞாபகம் வருதே...

ஞாபகம் வருதே...

ஞாபகம் வருதே...


ADDED : மே 31, 2024 10:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 10:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அப்பா... உங்களுடைய நண்பர் ராகவன் இன்று அதிகாலையில் இறந்துவிட்டார். அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வெளிநாட்டில் இருந்து மூத்த மகன் இன்று மாலை வருகிறான்' என சொன்னாள் ஆனந்தி. மருமகளின் பேச்சை கேட்டபடியே தன் மூக்குக்கண்ணாடியை துடைத்தார் ராஜாராம். ஆனந்திக்கு அப்பா இல்லாததால் மாமனார் ராஜாராமனை அப்பா என்றே அழைப்பது அவளின் வழக்கம்.

''அம்மா. ரொம்ப பசிக்குது. காபி கொண்டு வருகிறாயா...'' எனக் கேட்டார் ராமமூர்த்தி.

''சற்று பொறுங்கள். இட்லி தயாராகுது. இரண்டாவது முறை காபி சாப்பிட்டால் உடல்நலம் என்னாவது. இப்படித்தான் போன மாசம் இனிப்பு, காரம் என சாப்பிட்டு சுகர் உங்களுக்கு கூடிவிட்டது'' என கோபப்பட்டாள்.

''சரிம்மா. கோபப்படாதே. உன் அத்தை இறந்த பிறகு நீ தானம்மா குடும்பத்தையே பாத்துக்குற. நீ இல்லைன்னா இந்தக் குடும்பமே இல்ல'' என்று மருமகளின் பெருமைகளை பேசினார் ராமமூர்த்தி.

இதற்குள் சாம்பார், சட்னி என சுடச்சுட இட்லியுடன் வந்தாள் ஆனந்தி.

''சாப்பிடுங்க அப்பா. உங்க மகன், நான், நீங்கள் என மூவரும் காலையில பத்து மணிக்கு உங்க நண்பர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க போவோம்'' என்றாள்.

இதற்கு அவர், ''உன் வேலைகள் எல்லாம் முடிந்ததுதானே. இப்போது நான் சொல்லப்போகும் விஷயத்தை கொஞ்சம் கேட்கலாமா'' எனக் கேட்டார் ராமமூர்த்தி.

''வேலைகள் இருக்கட்டும். நீங்கள் சொல்லவந்ததை சொல்லுங்கள்'' என பணிவாக சொன்னாள். இதற்குள் ரூமில் இருந்த மகன் சிவராமனும் வந்தான்.

''இந்த உலகில் நமது கண்களுக்கு தெரிவதை மட்டும் வைத்துதான் பேசுகிறோம். பிறர் மனதில் என்ன உள்ளது என நினைத்து பார்ப்பதே இல்லை'' என பூடகமாக சொன்னார் ராமமூர்த்தி.

''நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே. தெளிவாக சொல்லக்கூடாதா'' எனக்கேட்டான் சிவராமன்.

''டேய். என் நண்பன் இறந்தது இப்போதுதான் உங்களுக்கு தெரியும். ஆனால் அவன் இருபது வருடங்களுக்கு முன்பே இறந்துட்டான்'' என்றார்.

ஒன்றும் புரியாததால் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இவர்களின் முகக்குறிப்பை உணர்ந்த ராமமூர்த்தி மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்.

''ஆம். அவனது மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டாயா என யாரும் அவனை கேட்காத நேரம்.

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே என காதுபட மருமகள் பேசியபோது.

'தாய்க்குப் பின் தாரம். தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்' என உறவினர்கள் பேசும்போது. காசு இங்கே மரத்திலயா காய்க்குது என மகன் அமில வார்த்தையை வீசிய போது, என்னங்க... பக்கத்துலதான இருக்கு முதியோர் இல்லம். அங்க இந்தப் பெரியவர சேர்க்க வேண்டியதுதானே என பக்கத்துவீட்டுக்காரர்கள் சொன்ன நேரம். என பல நேரங்களில் அவரது மனம் இறந்துவிட்டது'' என கண் கலங்கினார் ராமமூர்த்தி. உடனே அவரது தோளை அணைத்தபடி கட்டிப்பிடித்தான் மகன் சிவராமன்.

''நான் கொடுத்து வைத்தவன். ஏனென்றால் என்னை பாரமாக கருதாமல் என் தோளோடு தோள் சேர்ந்து நடக்க நீ இருக்கிறாய். நான் பெற்ற மகளைப் போல பார்க்கும் மருமகள் ஆனந்தி. என் மீது அன்பு வைத்திருக்கும் பேரக்குழந்தைகள் என குடும்பமே என்னை தாங்குகிறது. பாவம் இது போல் பலருக்கும் அமைவதில்லை.

நண்பன் ராகவனுக்கும் அமையவில்லை'' என்றார் ராமமூர்த்தி.

பார்த்தீர்களா... வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல.

வாழவைப்பதும் தான். பெற்றோர், குழந்தைகள், உற்றார் உறவினரோடு சேர்ந்து வாழுங்கள். பழைய நினைவுகளில் மூழ்கி சந்தோஷப்படுங்கள். யாரையும் உதாசீனம் செய்யாதீர்கள். கடமையும் முக்கியம். அதே நேரத்தில் உறவுகளையும் அரவணைத்து செல்லுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us