ADDED : மே 14, 2026 11:58 AM

லட்சுமி.மா, ஆலந்துார், செங்கல்பட்டு: *அதிகாலையில் மங்கள இசை கேட்டால்...
மகிழ்ச்சி, நிம்மதிக்கு வழிவகுக்கும்.
அருண்.கே, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி: *வைகாசியில் புதிய வீட்டில் குடியேறலாமா...
குடியேறலாம். எல்லா சுபநிகழ்ச்சிக்கும் ஏற்ற மாதம் இது.
சொக்கன்.வி, சோழவந்தான், மதுரை: *பிரதமை திதியில், சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
கூடாது. நன்மை தரும் தேவதையின் சக்தி அன்று குறைவாக இருக்கும்.
ஷாலினி.பா, வேளச்சேரி, சென்னை: *வீட்டில் ஹோமம், யாகம் செய்தால்...
மழை பொழியும். விரும்பியது கிடைக்கும்.
பாரதி.நா, வீரபாண்டி, தேனி: *நான் விரதம் இருக்கும் போது கோயில் பிரசாதத்தை சாப்பிடலாமா?
சாப்பிடக் கூடாது. கடவுளை மட்டும் சிந்திப்பதே விரதம். பிரசாதத்தை பிறருக்கு கொடுங்கள்.
தினேஷ்.கா, புளியங்குடி, தென்காசி: *அதிர்ஷ்டம், பிராப்தம் - இரண்டும் ஒன்றா?
இல்லை. தெய்வ அருளால் கிடைப்பது அதிர்ஷ்டம். பிறக்கும் போதே நம்முடன் வருவது பிராப்தம்.
கார்த்திகா.எம், குளச்சல், கன்னியாகுமரி: *வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் தடை வருகிறதே...
ஹனுமனுக்கு வடை மாலை சாத்துங்கள். நல்லதே நடக்கும்.
திவ்யா.ஸ்ரீ, அலகுமலை, திருப்பூர்: *முன்னோர் பெயரை வைக்காமல் குழந்தைக்கு வேறு பெயர் வைக்கலாமா...
முன்னோர் பெயருடன் நீங்கள் விரும்பும் பெயரையும் சேர்த்து வையுங்கள்.
ராம்.பா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: *நல்லவர்களுக்கு அதிகத் துன்பம் ஏன்?
நெருப்பில் போட்ட தங்கம் மின்னும். அது போல துன்பத்தின் மூலம் நல்லவர்களை கடவுள் பக்குவப்படுத்துகிறார்.
